திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.42 திருச்சிற்றேமம் (சித்தாய்மூர்) பண் - கொல்லிக்கௌவாணம் |
நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.
|
1 |
மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைச்சிற்றேமம் மேவினான்
ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.
|
2 |
நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.
|
3 |
கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்கண் ஏறடை யாதிமூர்த்தி யல்லனே.
|
4 |
வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.
|
5 |
பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.
|
6 |
கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.
|
7 |
சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.
|
8 |
தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.
|
9 |
வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.
|
10 |
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |